கொவிட்-19 நோய்க்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த வாரம் பெரும் வீழ்ச்சி கண்டது.
இது நோய்த்தொற்று அதிகமாக இருப்பினும் தற்போதைய நோய் அலை குறைந்து வருவதைக் காட்டுவதாக கூறப்படுகிறது.
“கொவிட்-19 நோய்த்தொற்று அலை குறைந்து வருகிறது என்று நம்பிக்கை கொள்ளலாம்,” என்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்று நோய்ப் பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகரான பேராசிரியர் டேல் ஃபிஷர் கருத்துரைத்தார்.
டிசம்பர் 24லிருந்து 30ஆம் தேதிவரை 496 நோயாளிகள் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது அதற்கு முந்திய வார எண்ணிக்கையான 864ஐ எடுத்துக் கொண்டால் பெரும் வீழ்ச்சி.
அதுபோல், டிசம்பர் கடைசி வாரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13. இதுவே அதற்கு முந்திய வாரம் 23ஆக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கொவிட்-19 நோய்த்தொற்று அலையில் டிசம்பர் 10லிருந்து 16வரையிலான வாரத்தில் 58,300 பேருக்கு நோய் கண்டது. அந்த வாரம் 965 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
இதில் வெளியூரிலிருந்து ஆண்டிறுதி விடுமுறையை முடித்து நாடு திரும்புவோர் நோய்த்தொற்று எண்ணிக்கையை அதிகரித்ததாக தனியார் துறையில் இருக்கும் டாக்டர் அசோக் குருப் கூறினார். ஆனால், இதை தேசிய பல்கலைக்கழக சா சுவீ ஹாக் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் அலெக்ஸ் குக் மறுத்தார். இவர் சிங்கப்பூர் மக்களிடையே தற்பொழுது போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் புதிய நோய்க் கிருமி நீடித்து இருக்க முடியவில்லை என்று கருத்துரைத்தார்.
“ஆகையால், விடுமுறை முடித்து திரும்பி வருவோர் நோயுடன் வந்தால் அவர்கள் புதிய உருமாறிய நோய்க் கிருமிகளைக் கொண்டு வந்தால் அன்றி புதிய நோய் அலையை ஏற்படுத்த முடியாது,” என்று பேராசிரியர் அலெக்ஸ் குக் விளக்கினார்.