செவ்வாய்க்கிழமை (ஜனவரி 9) கூடும் நாடாளுமன்றக் கூட்டத்தில், 2021ஆம் ஆண்டில் நிகழ்ந்த துவாஸ் எரியாலை வெடிப்புச் சம்பவம் பற்றியும் அதன் தொடர்பில் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் மீதான குற்றச்சாட்டுகள் பற்றியும் தெரிவிக்கப்படும்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ அதன் தொடர்பில் அமைச்சர்நிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றுவார்.
வேலையிடப் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்காக இரண்டு வாரங்களுக்கு முன், தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இரண்டு ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
2021ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதியன்று நிகழ்ந்த வெடிப்பில் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இரு அதிகாரிகள் மரணமடைந்தனர். துவாஸ் எரியாலையின் மின்சார அறையில் ஏற்பட்ட கோளாற்றைச் சரிசெய்வதற்காக அவர்கள் பணிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்துக்குப் பிறகு வேலையிடப் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்த தேசிய சுற்றுப்புற வாரியம் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்று செம்பவாக் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் போ லி சான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிங்கப்பூரிலுள்ள அனைத்து எரியாலைகளிலும் இப்படிப்பட்ட சம்பவம் நிகழாதிருக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து ராடின் மாஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் விளக்கம் கேட்டுள்ளார்.
ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் அமைந்துள்ள சிங்கப்பூரின் ‘லாங் ஐலண்ட்’ நீலமீட்புத் திட்டம் பற்றி பல்வேறு கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
வீவக வாடகை வீடுகளில் உயர்ந்து வரும் குடியிருப்பாளர்கள் வரம்பு பற்றி கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங், அதிகரித்து வரும் அண்டை வீட்டார் சச்சரவுகள் பற்றி தேசிய வளர்ச்சி அமைச்சு அறிந்துள்ளதா என்றும் அந்தச் சச்சரவுகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகளை அது எடுத்துள்ளதா என்றும் கேட்டுள்ளார்.