வெளிப்புறக் கல்வித் திட்டங்களை வழங்கும் நிறுவனங்கள், அவசரநிலை ஏற்படும்போது அதைச் சமாளிக்கவும் பாதுகாப்பை மேம்படுத்தவும் ஆதரவு வழங்கும் புதிய வழிகாட்டி ஒன்று ஜனவரி 24ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.
கிட்டத்தட்ட 20 பக்கங்களுடைய அந்த வழிகாட்டிக் குறிப்பை 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறுவப்பட்ட வெளிப்புற சாகச விளையாட்டுக் கல்வித்திட்ட (ஓஏஇ) மன்றம் வெளியிட்டுள்ளது.
அவசரநிலை ஏற்படுவதற்கு முன், அவசரநிலையின் போது, அவசரநிலை ஏற்பட்ட பின் என ஒவ்வொன்றுக்கும் நிறுவனங்கள் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை இந்த வழிகாட்டி விளக்கியுள்ளது.
இதன் மூலம் குறிப்பிட்ட சில சாகச விளையாட்டுக் கல்வித் திட்டங்களுடன் தொடர்புடைய அவசரநிலைகளையும் கடுமையான சம்பவங்களையும் அடையாளம் காண இயலும்.
அவசரநிலையின் கடுமை எத்தகையது என்பதை நிறுவனங்கள் உணர்ந்து அதற்கு ஏற்ப எத்தகைய பதில் நடவடிக்கைகளை எடுப்பது என்றும் அறிந்திட முடியும்.
அவசரநிலை தொடர்பில் நிறுவனங்கள் வகுக்கும் தங்கள் செயல்திட்டத்தில் ஒவ்வொரு நபருக்கும் குறிப்பிட்ட சில பொறுப்புகள் தரப்படவேண்டும் என்றும் வழிகாட்டிகள் சுட்டுகின்றன.
சாஃப்ரா ஈசூன் மனமகிழ் மன்றத்தில் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதியன்று சாகச நடவடிக்கையின்போது உயரமான இடத்திலிருந்து 15 வயது ஜெத்ரோ புவா சின் யாங் விழுந்து இறந்ததை அடுத்து வழிகாட்டிகள் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
மேலும், ஓஏஇ நடவடிக்கைகளில் பாதுகாப்பை உறுதிசெய்யும் கட்டாய வழிகாட்டுதல்கள் தொகுப்பு ஒன்றும் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.
2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பொதுமக்கள் இந்தத் தொகுப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கலாம். அதையடுத்து, 2025ஆம் ஆண்டில் அது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.