செங்காங் வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்து மோட்டார்சைக்கிளைத் திருடிய சந்தேகத்தின்பேரில் 37 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக திங்கட்கிழமை (ஜனவரி 29) காவல்துறை தெரிவித்துள்ளது.
மோட்டார்சைக்கிள் ரிவர்வேல் டிரைவிலிருந்து திருடப்பட்ட தகவல், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.25 மணியளவில் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை கண்காணிப்புப் படக்கருவிகள் பதிவான காட்சிகளைப் பயன்படுத்தி, திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவரை அதிகாரிகள் அடையாளம் கண்டு திங்கட்கிழமை ( ஜனவரி 29) கைது செய்தனர்.
ஈசூன் ரிங் ரோட்டில் அந்த மோட்டார்சைக்கிள் மீட்கப்பட்டது.
வாகனத்தைத் திருடியதாக அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.