மும்பை: அணு ஆயுதத் தளவாடங்களை ஏற்றிக்கொண்டு பாகிஸ்தானுக்குச் செல்லவிருந்த சரக்குக் கப்பல் ஒன்று மும்பைத் துறைமுகத்தில் சிக்கியதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. அதில் இருந்த சரக்குகளை துறைமுக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தீவு நாடான மால்டாவை சேர்ந்த சரக்கு கப்பல் சீனாவின் ஷெகோவ் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு பாகிஸ்தானின் கராச்சி நகருக்குப் புறப்பட்டது. இந்த சரக்குக் கப்பல் கடந்த ஜனவரி 23ஆம் தேதி இந்தியாவின் மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது.
அந்தக் கப்பலை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் 2.2 டன் எடையுள்ள தளவாடங்கள் இருந்தன. அந்தத் தளவாடங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்தத் தளவாடங்களை ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வில், சரக்குக் கப்பலில் வெப்ப மின்னியல் தளவாடங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றின்மூலம் அணுவாயுதத் தயாரிப்புக்குத் தேவையான யுரேனியத்தைச் செறிவுட்ட முடியும். அதையடுத்து அந்தத் தளவாடங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். மால்டா நாட்டைச் சேர்ந்த அந்தக் கப்பலை மட்டும் அதிகாரிகள் விடுவித்தனர்.
“பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விநியோகம் செய்வதற்கு அனைத்துலக அமைப்புகள் தடைவிதித்துள்ளன. அதையடுத்து பாகிஸ்தான் உள்நாட்டிலேயே அணுவாயுதங்களை உற்பத்தி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அதற்கான தளவாடங்களை சீனா அனுப்பி வைப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மூன்று சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.
“ஆனால், இப்போது தொழிற் சாலைகளுக்கான இயந்திரங்கள் என்ற பெயரில் அணுவாயுதத் தயாரிப்புக்குத் தேவையான இயந்திரங்களைப் பாகிஸ்தானுக்குச் சீனா அனுப்பி வருகிறது.
“ஷாங்காய் ஜேஎக்ஸ்இ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த பாகிஸ்தான் விங்ஸ்பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான தளவாடங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. அவற்றை பறிமுதல் செய்துள்ளோம்,” என்று கூறியுள்ளனர் மும்பை சுங்கத்துறை அதிகாரிகள்.
சீனா அனுப்பிய தளவாடங்கள் மூலம் அணு ஆயுதங்களை சுமந்துசெல்லும் ஏவுகணைகள், பேலிஸ்டிக் ஏவுகணைகளையும் தயாரிக்க முடியும்.
கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு கப்பலில் அனுப்பப்பட்ட ஏவுகணைத் தயாரிப்புக்குத் தேவையான தளவாடங்கள் குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
அணு ஆயுதத் தளவாடங்களை சரக்குக் கப்பலில் அனுப்பியது அனைத்துலக சட்ட விதிமீறல் ஆகும். இதுதொடர்பாக அனைத்துலக அமைப்புகளிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் கண்டனம்
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்திய அதிகாரிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் வர்த்தகச் சரக்குகள்தான் கொண்டு வரப்பட்டது. இந்திய அதிகாரிகள் அதைத் தவறாக சித்திரித்துக் கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த ஒரு நிறுவனம், லேத் இயந்திரத்தைத் தருவிப்பது என்பது வழக்கமான ஒரு செயல்தான். இதில் எவ்வித ஒளிவுமறைவுமில்லை. அதுகுறித்து அனைத்து விவரங்களையும் அந்த சரக்குகளிலேயே காணலாம். அவ்வாறிருக்க அணுவாயுதத் தளவாடங்கள் என இந்தியா குறிப்பிட்டிருப்பது உண்மைக்கு முற்றிலும் புறம்பான கருத்து.
இந்தியா எங்களுக்கு வந்துசேர வேண்டிய சரக்கு களைப் பறிமுதல் செய்திருப்பது நியாயமற்ற செயல். மேலும் இந்தியா அனைத்துலகச் சட்டத்தை மீறும் வகையில் பாகிஸ்தானுக்கு வரவேண்டிய சரக்கைப் பறிமுதல் செய்துள்ளது.
வர்த்தக ரீதியிலான சரக்குகளைப் பறிமுதல் செய்யும் இந்தியாவின் போக்கை பாகிஸ்தான் வன்மையாகக் கண்டிக்கிறது. அனைத்துலகச் சட்டங்களை மீறி தன்னிச்சையாக நடந்துகொள்ளும் இந்தியாவின் போக்கு கண்டித்தக்கது என்று பாகிஸ்தான் சாடியுள்ளது.