ராணா, டாப்சி நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் உருவாகும் படம் 'காஸி'. இந்தியா, பாகிஸ்தான் போரின்போது, விசாகப்பட்டினம் அருகே கடலில் மர்மமான முறையில் மூழ்கிய பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றிய படம் இது. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த கடற்படை வீரர்களிடம் தகவல்கள் பெற்று, அதன் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. இதை சங்கல்ப் ரெட்டி இயக்குகிறார். இப்படத்தில் நடிப்பது உற்சாகம் தருவதாகச் சொல்கிறார் டாப்சி.
"நமது இந்திய ராணுவம், விமானப்படை பற்றி நிறைய படங்கள் உருவாகியுள்ளன. ஆனால், கடற்படை பற்றி திரையில் அதிகமாக வந்தது இல்லை. இந்தப் படம் அந்தக் குறையைப் போக்கும். இது வரலாற்றுப் படம். இந்திய சினிமாவில் மிக முக்கியமான படமாகவும் இருக்கும். "அமிதாப் பச்சனுடன் இந்திப் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அவருடன் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ள நாட்களை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இப்போது என் கனவு நனவாகி இருக்கிறது. அவருடன் ஒரு ரசிகையாக, தம்படம் (செல்ஃபி) எடுத்துக் கொண்டபோது வானத்தில் மிதந்தேன்," என்கிறார் டாப்சி.