மனிதவள அதிகாரியாகவும் 14 வயது மகளுக்குத் தாயாராகவும் உள்ள திரேசி மகேஷ், 44, இளையரைப் போன்ற கட்டுடலுடன் காணப்படுகிறார்.
இவர் ஒரு காலத்தில் உடற்பருமனாக இருந்தார் என்பதை இப்போது இவரைப் பார்ப்பவர்கள் நம்ப மறுக்கக்கூடும். கர்ப்பிணியாக இருந்தபோது உடல் எடை அதிகம் கொண்டுள்ள திருவாட்டி திரேசி, கருவைச் சுமந்த காலகட்டத்தில் அவரது எடை 30 கிலோ கூடியது.
இதனால் தம்மீது விழுந்த ஏளனப் பார்வைகளையும் சுடுசொற்களையும் பொறுத்துக்கொண்ட இவர் எடையைக் குறைப்பதில் கவனம் செலுத்தினார்.
பத்தாண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூர் பெண்கள் விழாவில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 4) கெளரவிக்கப்பட்ட ஐந்து ‘எஸ்ஜி ஹீரோயின்’ எனப்படும் சிங்கப்பூர் நாயகிகளில் இவரும் ஒருவர்.
அதிக எடையால் எதிர்நோக்கிய சிரமங்கள்
மன உளைச்சலால் அளவுக்கு மீறி சாப்பிட்டதால் எடை மெல்லக் கூடியதை இவர் கண்டுகொள்ளவில்லை. தம் உடல் இந்த அளவுக்குப் பருமனாகும் என அப்போது எதிர்பார்க்கவில்லை என்று திருவாட்டி திரேசி நினைவுகூர்ந்தார்.
எடை கூடியதால் இவர் அடிக்கடி களைத்துப்போனார். இதனால் அவர் சாலை மேம்பாலத்தைப் பலமுறை கடக்க இயலாமல் தவித்தார். அத்துடன் தனக்குப் பிடித்த வடிவங்களில் சேலைகளையும் பஞ்சாபி உடைகளையும் உடுத்த முடியவில்லை. மின்தூக்கியில் மக்கள் கூட்டம் இருந்தபோது தம்மைக் கண்டதும் சிலர் ஒதுங்கி உள்ளே வர தயங்கியதைக் கண்ட இவரது மனம் புண்பட்டது.
‘உங்களை நீங்கள் நேசிக்கவேண்டும்’
குடும்பத் தலைவிகள் தங்கள் கணவர் மற்றும் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு சொந்த ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தத் தவறுவதை தாம் பரவலாகக் காண்பதாக திருவாட்டி திரேசி கூறுகிறார்.
உடற்பயிற்சிக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கும்போது மேம்படும் ஆரோக்கியத்தால் குடும்பம் பயன் அடைவதை இவர் உணர்ந்தார். ஒருவர் தன்னை நேசித்து மரியாதை தரும்போதுதான் பிறரை நேசிக்க முடியும் என்பது இவர் கற்றுக்கொண்ட பாடம்.
48 கிலோ எடையைக் குறைத்துக்கொண்டு தற்போதைய நிலையை அடைவதற்கு 10 ஆண்டு காலம் எடுத்துள்ளபோதும் மாத்திரை, அறுவை சிகிச்சை போன்றவற்றைத் தவிர்த்து சிரமப்பட்டு உழைத்துப் பயன் அடைந்ததை எண்ணி திருவாட்டி திரேசி மகிழ்கிறார்.
ஏறிய வெற்றிப்படிகள்:
- நல்லவற்றை நினைத்து, கேட்டு, பேசியதன் மூலம் திருவாட்டி திரேசி தம் மனத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தினார்.
- ஹெல்தி 365, லூஸ் டு வின் போன்ற சமூகத் திட்டங்களில் இவர் சேர்ந்தார். இந்த வகுப்புகளில் இவர், தம்மைப்போல் ஒரே மனப்பான்மை கொண்டவர்களைச் சந்தித்து நட்புகொண்டார்.
- இவர் சோறு, பலகாரம் போன்ற சர்க்கரை அதிகமுள்ள உணவுவகைகளைத் தவிர்த்தார்.
- நேரத்தை ஒழுங்காக ஒதுக்கீடு செய்வதை இவர் கடைப்பிடித்தார். பயிற்சி செய்வது சில நாள்கள் தவறிப் போனாலும் மனம் தளராமல் மீண்டும் தொடர்ந்தார்.