கோலாலம்பூரில் பிறந்து சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் வளர்ந்த சங்கர் கணேஷ் ஸ்ரீதரன், சிறுவயதில் வறுமை காரணமாக உப்புத் தண்ணீர் கலந்த சோற்றைச் சாப்பிட வேண்டிய நிலைக்கு ஆளானவர்.
இன்று மலேசியக் கலைஞரான ‘ஃபங்கி ஷங்கர்’ எனப்படும் திரு சங்கர், 45, வானொலிப் படைப்பாளராகவும் தொலைக்காட்சி நெறியாளராகவும் பெயர் பெற்றுள்ளார்.
கோலாலம்பூரிலுள்ள ஜாலான் ஈப்போவில் பிறந்த திரு சங்கர், மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது அவருடைய குடும்பம் சிங்கப்பூருக்கு வந்தது. விற்பனையாளராகவும் மற்ற நேரங்களில் மேடைப் பாடகராகவும் திரு சங்கரின் தந்தை குடும்பத்திற்காக சம்பாதித்தார். இல்லத்தரசியான தாயார், மூன்று அக்காக்கள், ஓர் அண்ணன் ஆகியோருடன் வளர்ந்தார் சங்கர்.
சிங்கப்பூர் தொலைக்காட்சிப் பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன் 1990களில் வெளிவந்த ‘யார்’ என்ற உள்ளூர் நாடகத்திலும் நடித்தார். மலேசியத் தொலைக்காட்சி ஒளிவழி ஒன்றில் நிகழ்ச்சிப் படைப்பாளராகப் பணியாற்றி ‘டிஎச்ஆர் ராகா’ வானொலி நிலையத்தில் படைப்பாளர் வாய்ப்பினைப் பெற்றார்.
இந்தியாவில் யார் அறிமுகமும் இன்றி, பலநாள் முயற்சிக்குப் பிறகு சன் மியூசிக் ஒளிவழியில் நிகழ்ச்சி படைத்தார். பின், சூரியன் எஃப்எம் நிகழ்ச்சியை நடத்தினார். ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றியபின் சிங்கப்பூர் திரும்பினார்.
“என் தாயாரைப் பிரிந்திருந்த சோகம் தாங்காமல் மீண்டும் சிங்கப்பூர் வந்தேன்,” எனத் தம் தாயாரை அண்மையில் இழந்த திரு சங்கர் கூறினார்.
சிங்கப்பூரில் வண்ணத்திரை ஒளிவழியில் அறிவிப்பாளராக இருந்து, ஷக்தி எஃப்எம் நிலையத்தில் நிர்வாகியாகச் செயல்பட்டு, 30 அறிவிப்பாளர்களை வழிநடத்தும் வாய்ப்பினையும் இவர் பெற்றார்.
நான்கு மகள்களுக்குத் தந்தையான இவர், ஒருசில இலக்குகளை எட்டவில்லை என்று வருத்தப்படுவதுண்டு.
“மலேசியாவில் மூன்றாவது வானொலி நிலையத்தைத் திறந்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து 30 விழுக்காடு, வசதிகுறைந்த தமிழ் மக்களைச் சேரவேண்டும் என எண்ணினேன். இதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டன,” என்றார் சங்கர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப நிலையம் ஒன்றை இவர் நடத்திவருகிறார்.
சமூகத்தில் பின்தங்கியோருக்குக் குரல்கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் ‘ஃபங்கி’ என்ற செயலியை சங்கர் வெளியிட உள்ளார். அதன்மூலம் சமுதாயத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவது இவர் எண்ணம்.