டேராடூன்: குதிரையின் காலை உடைத்த பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் ஜோஷி என்பவர் டேராடூனில் கைது செய்யப்பட்டார். உத்தரகாண்ட் மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் டேராடூனில் கடந்த 14ஆம் தேதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது பாதுகாப்புக்கு வந்த காவல்துறை படையைச் சேர்ந்த 'சக்திமான்' என்ற குதிரையின் முன்னங்காலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் ஜோஷி தடியால் அடித்தார். மற்றொருவர் கடிவாளத்தை இழுத்துக் குதிரையைக் கீழே தள்ளினார். இதில் அந்தக் குதிரை கீழே விழுந்து அதன் பின்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். பிரமோத் போரா என்பவர் தான் குதிரையைக் கீழே தள்ளியவர் என அடையாளம் கண்டனர். இதனைத் தொடர்ந்து முகானி என்ற பகுதியில் பிரமோத் போராவை காவல்துறையினர் கைது செய்தனர். காயமடைந்த குதிரைக்கு ராணுவ மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
குதிரை வலியால் துடித்து வருவதாகவும் நிற்க முடியாமல் அவதிப்படுவதாகவும் மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டேராடூனில் குதிரை சக்திமானுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சையானது வெற்றிகரமாக முடிந்தது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். குதிரையினால் இப்போது நிற்க முடிகிறது என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அறுவை சிகிச்சையை அடுத்துக் குதிரையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. புகைப்படங்கள் அனைவரையும் கண்கலங்க செய்து உள்ளது. பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வை வசைப்பாடிய சமூக வலைதள பயனாளர்கள், பாரதிய ஜனதா தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். முற்றிலும் மனிததன்மையற்ற செயல் என்று கண்டனம் தெரிவித்தனர். இதற்கு காரணமான குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ரோகன் என்பவர் பதிவு செய்து உள்ள கருத்தில், "கடவுளே குதிரையைக் காப்பாற்றுங்கள்... உங்களுடைய கருணையைக் காட்டுங்கள். சக்திமானே உண்மையான வீரர். பேச முடியாத இந்த விலங்கிற்கு நான் தலைவணங்குகிறேன்," என்று கூறி உள்ளார். முன்னதாக பாஜக தலைவர், அமைச்சர் மேனகா காந்தி ஜோஷியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். எம்.பி. ஹேமமாலினி, "அப்பாவி விலங்கின் மீது இதுபோன்ற காரியத்தை யாராலும் செய்ய முடியுமா என்று என்னால் நம்ப முடியவில்லை! "இதற்குக் கண்டனம் தெரிவிக்கின்றேன். குதிரை உயிர் பிழைத்ததற்கு கடவுளுக்கு நன்றி," என்று டுவிட்டரில் கருத்துத் தெரிவித்து இருந்தார். "இந்நிலையில் பாஜக சட்ட மன்ற உறுப்பினர் கணேஷ் ஜோஷி டேராடூனில் கைது செய்யப்பட்டு உள்ளார்.