ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தின் கும்ஹாரி பகுதியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் மூன்று பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்னதாகவே உள்ளூர் மக்கள் பேருந்துக்குள் சிக்கி இருந்தவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய், “விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெறுபவர்களைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்த துணை முதல்வர் விஜய் சர்மா, அவர்களின் உடல்நலன் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்தச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சாலையின் இருபுறமும் 20 அடி ஆழமுள்ள சுரங்கப் பள்ளங்கள் இருக்கின்றன. இவை 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது. பேருந்தின் முகப்பு விளக்குகள் எரியாமல் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக நோயாளி ஒருவர் தெரிவித்தார்,” என்று கூறினார் விஜய் சர்மா.
விபத்து குறித்து துர்க் மாவட்ட ஆட்சியர் ரிச்சா பிரகாஷ் சௌத்ரி கூறுகையில், “துர்க் மாவட்டத்தில் பணியாற்றிய ஒரு தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, செவ்வாய்க்கிழமை இரவு கும்ஹாரி அருகே சாலையோரம் இருந்த பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது.
“காயமடைந்த 14 பேரில் 12 பேர் எய்ம்ஸ் (ராய்ப்பூர்) மருத்துவமனையிலும் இருவர் ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளித்து வருகிறோம். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை,” என்றார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பதிவில், “சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் ஏற்பட்ட பேருந்து விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவி வருகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.