திரையுலகில் பேய்ப் படங்கள் தற்பொழுது ரசிகர்களை ஆட்டிப்படைத்து வருகின்றன. ஒரு படம் வெற்றி பெற்றவுடன் ரசிகர்கள் வெறுத்துப்போகும் அளவிற்கு பேய்ப்படங்களாக எடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர். அந்த வரிசையில் திரிஷா தற்பொழுது ஆவியாக நடிக்கும் படம் 'நாயகி'. பேய்ப் படங்களைத் தயங்காமல் வாங்கி வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ் திரிஷா நடிக்கும் 'நாயகி' படத்தையும் வெளியிடுகிறது. 'மாயா' படத்தில் நயன்தாரா நடித்த மாதிரி இந்தப் படத்தில் திரிஷாதான் நாயகி, நாயகன் எல்லாம். கதையில் உண்மையில் இவர் ஒரு திரைப்பட நடிகையாகவே நடித்திருக்கிறார்.
கதைப்படி 80களில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் திரிஷா. பெரிய பங்களாவில் ராணி மாதிரி வாழ்கிறார். அவரது வளர்ச்சியைப் பொறுக்காத சிலர் அந்த பங்களாவிலேயே அவரைக் கொலை செய்து விடுகிறார்கள். அதன் பிறகு அந்தப் பங்களா பூட்டப்பட்டு விடுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அதனை ஜெயபிரகாஷ் வாங்கி குடும்பத்தோடு குடியேறுகிறார். அந்தக் குடும்பத்தில் ஒருத்தி இன்னொரு திரிஷா. பங்களாவில் ஆவியாக திரியும் திரிஷா தற்போது குடியேறியுள்ள திரிஷாவின் உடலுக்குள் புகுந்து தன் மரணத்துக்குக் காரணமானவர்களைப் பழி வங்குகிற கதை இது.