மும்பை: மும்பையில் உள்ள மகாலட்சுமி ரயில்நிலையத்தில் திங்கட்கிழமை பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்த 44 வயது பெண்மணி ஒருவர் பயணச்சீட்டு பரிசோதிக்கும் அதிகாரியிடம் சிக்கிக் கொண்டார். அதற்கு அபராதமாக ரூ.260 கட்டும்படி பரிசோதகர் அந்தப் பெண்ணிடம் கேட்டிருக்கிறார். பிரேமலதா என்ற அந்த 44 வயது பெண்மணி, பரிசோதகரைப் பார்த்து "கோடிகோடியாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் ஓடிப்போன மல்லையாவைப் பிடித்துக்கொண்டு வாருங்கள். "பிறகு நான் அபராதம் கட்டுகிறேன்," என்று கூறினாராம்.
இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத பரிசோதகர், ஏதோ விளையாடுகிறார் இந்தப் பெண்மணி என்று சற்றுப் பொறுமையாக இருந்துவிட்டு மீண்டும் அபராதம் பற்றி பேச்செடுத்திருக்கிறார். ஆனால் அந்தப் பெண்மணி கொஞ்சமும் அசரவில்லை. மீண்டும் அதே பதிலைச் சொல்லியிருக்கிறார். சுமார் அரை மணி நேரமாக பிரேமலதாவிடம் கெஞ்சியிருக்கிறார் பரிசோதகர். ஒரு பலனும் இல்லை. இதனால் பொறுமையிழந்த அவர், காவல்துறையினரிடம் அவரை ஒப்படைத்தார். அபராதம் கட்டவில்லையெனில் சிறைக்குச் செல்ல வேண்டி இருக்கும் என மிரட்டினர். பிரேமலதா கொஞ்சமும் பயப்படுவதாக இல்லை. வேறு வழியின்றி காவல்துறையினர் அவரிடம் கெஞ்சியும் பார்த்தனர். ஆனால் அவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.