சிங்கப்பூரர்கள் தங்கள் வாழ்க்கை செலவினத்தை சமாளிக்க அரசாங் கம் ஒருமுறை வழங்கும் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு திட்டத்தால் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் மக்கள் பயன்பெறுவர். இதன்படி, நேற்று தமது வரவு செலவுத் திட்டத்தில் இதை 'சிறப்பு ரொக்கத் தொகை' என்று வர்ணித்த நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட், சிங்கப்பூரர்கள் இவ்வாண்டு $200வரை பெறுவர் என்று கூறினார். ஆண்டுதோறும் வழக்கமாக $300வரை பெறத் தகுதியுள்ளோர் இந்தத் தொகையைக் கூடுதலாக பெறுவர்.
"இதைப் பெறுவோர் தாங்கள் வாழும் பேட்டையிலுள்ள அக்கம்பக்கக் கடைகளில் இதை செலவு செய்தால் நமது உள்ளூர் தொழில்களுக்கு ஆதரவு வழங்கியதாக அமையும்," என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கூடுதலாக வழங்கப்படும் இந்த 'சிறப்பு ரொக்கத் தொகை'யால் அரசாங்கத்திற்கு இவ்வாண்டு கூடுதலாக $280 மில்லியன் செலவு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதன்மூலம் 21 வயது நிரம்பிய சிங்கப்பூரர்கள் 2015ஆம் ஆண்டு வருமான மதிப்பீட்டின்படி $26,000 வெள்ளியோ அதற்கும் குறைவான வருமானமோ பெறுவோர் இதைப் பெறத் தகுதி பெறுவர். கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியில் இவர்களின் வீட்டு மதிப்பு $13,000வரை இருப்பின் இவர்கள் $500யும், வீட்டு மதிப்பு $13,001லிருந்து $21,000 இருப்பின் $250யும் பெறுவர்.