கோலாலம்பூர்: பெட்ரோனாஸ் நிறுவனத்தின் புதிய ஆலோசகராக மலேசிய முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவி நியமிக்கப்பட்டுள்ளார். எண்ணெய், எரிவாயு நிறுவனமான பெட்ரோனாஸின் ஆலோசகர் பொறுப்பை திரு அப்துல்லா படாவி ஏற்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்தார். திரு அப்துல்லா படாவியின் நியமனம் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வருவதாக ஊடகத் தகவல் தெரிவித்தது.
பெட்ரோனாஸ் நிறுவனத்தின் ஆலோசகர் பதவியிலிருந்து மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது இம்மாத தொடக்கத்தில் நீக்கப்பட்டார். அவர் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவாக இல்லாததால் அவரைப் பதவியிலிருந்து நீக்கியதாக அரசாங்கம் பின்னர் அறிவித்தது. அந்தப் பொறுப்பு தற்போது 76 வயதாகும் திரு அப்துல்லா படாவிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.