மூன்று மதரஸா மாணவிகளைத் தாக்கியவரை அடையாளம் கண்டு கைது செய்ததில் போலிசார் சிறந்த முறையில் செயல்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் கா.சண்முகம் பாராட்டியுள்ளார். "இது அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கிறது," என்று அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை 7.20 மணி அளவில் பாயலேபார் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் ஆடவர் ஒருவர் 14 முதல் 16 வயது வரையுள்ள மூன்று மதரஸா மாணவிகளைப் பின் தொடர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்பில் நேற்று முன்தினம் இரவு 9.50 மணி அளவில் 48 வயது சீன ஆடவரை போலிஸ் கைது செய்துள்ளது.
இந்தத் தாக்குதல் இஸ்லாமியருக்கு எதிரான மனப்போக்கினால் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இஸ்லாமியருக்கு எதிரான மனப்போக்கு பற்றி நான் புதன்கிழமை அன்று குறிப்பாக எச்சரித்திருந்தேன். அது சிங்கப்பூரின் ஆத்மாவை அழிக்கக்கூடிய புற்றுநோயாகலாம். இதை நாம் சகித்துக்கொள்ள முடியாது. உள்துறை அமைச்சு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்," என்றார். இது குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அமைச்சர் சண்முகம், "இந்த விவகாரத்தில் முழு விவரங்கள், தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை. எனவே, விசாரணை முடியும்வரை காத்திருக்க வேண்டும். இதன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து நாம் ஊகங்களுக்கு இடம்கொடுக்கக்கூடாது," என்றார்.