ஒரே படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகளுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. 'போடா போடி', 'நானும் ரவுடிதான்' ஆகிய படங்களுக்கு பிறகு விக்னேஷ் சிவன், மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்று தலைப்பும் வைத்துவிட்டார்கள். படத்தை ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். தலைப்பில் 'ரெண்டு காதல்' என்று வந்துள்ளதால், இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிப்பார்கள் என்று கூறப்பட்டது. சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளிவந்த படங்கள் வெற்றிநடை போடுவதால், இப்படத்தில் முன்னணி நாயகிகளை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி ஏற்கெனவே விஜய்சேதுபதியுடன் நடித்த நயன்தாராவை இப்படத்தில் ஒரு நாயகியாக ஒப்பந்தம் செய்யலாம் என முடிவு செய்தனர். இரண்டாவது நாயகியாக நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அவர் முதலில் இதில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இப்போது அவர் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி அதிர்ஷ்டசாலிதான்!