ஆறு ஆண்டுகளுக்குமுன் இருந்ததைக் காட்டிலும் இப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச கார் நிறுத்த சேவை வழங்கும் பொது கார் நிறுத்தப் பேட்டைகளின் விகிதம் குறைந்துள்ளது. இப்போது அரசாங்க மற்றும் சட்டத்திற்குட்பட்டு வரும் கார் நிறுத்தப் பூங்காக்களில் 55 விழுக்காடு மட்டுமே ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக கார்களை நிறுத்திக் கொள்ள அனுமதிப்பதாக தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார். 2005, 2010ஆம் ஆண்டுகளில் இந்த விகிதம் 70 விழுக்காடாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச சேவை வழங்குவது குறித்து மதிப்பிடும்போது, சம்பந்தப்பட்ட அமைப்புகள் குறிப்பிட்ட பகுதியின் பிரத்தியேக, கார் நிறுத்தத் தேவைகளுக்கிடையே ஒரு சமநிலையைப் பேண வேண்டியிருக்கிறது என்று அமைச்சர் விளக்கினார்.
"எடுத்துக்காட்டாக, உள்ளூர் குடியிருப்பாளர்கள் தங்களது கார்களை நிறுத்த அதிக இடம் தேவைப்படும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக கார் நிறுத்தப் பேட்டைகளில் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச கார் நிறுத்த சேவை வழங்கும் சாத்தியம் இருக்காது," என்றார் திரு லீ. அரசாங்க, சட்டத்திற்குட்பட்டு வரும் கார் நிறுத்தப் பேட்டைகளை தேசிய பூங்கா கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம், வீவக போன்ற அமைப்புகள் நிர்வகிக்கின்றன.