பொங்கல் திருநாளைக் கோலாகலமாக தங்கள் சொந்த கிராமங்களில் கொண்டாட முடியவில்லையே என்ற ஊழியர்களின் ஏக்கத்தைத் தீர்த்து வைத்தது எம்இஎஸ் நிறுவனம். வெள்ளிக்கிழமை வேலை நாளாக இருந்ததால் லிட்டில் இந்தியாவுக்கும் கோயில்களுக்கும் செல்ல ஊழியர்களுக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. இதனால் சிறப்புக் கொண்டாட்டத்துக்கு விடுதி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. சிங்கப்பூரில் வேலை செய்யும் சுமார் 150 தமிழ் பேசும் ஊழியர்கள் கடுமையான மழையையும் பொருட்படுத்தாமல் முதல் முறையாக ஊழியர்களுக்கான பொங்கல் கொண்டாட்டத்தில் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.
"சித்தூர் மாவட்டத்தில் விவசாயத் தொழில் செய்து வளர்ந்த எங்களுக்குச் சிங்கப்பூரில் பொங்கலைக் கொண்டாட முடியாத சூழல். எதிர்பாராத விதமாக இங்கு தங்கும் விடுதியில் பொங்கல் கொண்டாடும் வாய்ப்பை விடுதி நிர்வாகம் அமைத்துத் தந்து வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொடுத்ததில் கட்டுக்கடங்கா மகிழ்ச்சி," என்று தொழில்நுட்ப வல்லுநரான 25 வயது வி. பிராபகரன் கூறினார்.
"பொங்கல் தினத்தன்று காலையிலேயே குடும்பத்தினருடன் சூரியப் பொங்கல் படைத்து, மாலையில் ஊர் மக்கள் கூடக் கோவிலில் கூட்டுப் பொங்கல் வைப்போம். மறுநாள் ஊர் மக்கள் அனைவருடன் சேர்ந்து மாடு, ஆடு, எருது அனைத்துக்கும் அலங்காரம் செய்து ஊர்ப் பொது இடம் ஒன்றில் வரிசையாகப் பொங்கல் செய்வதுடன் விலங்குகளுக்கு சிறப்பு உணவும் ஊட்டுவது வழக்கம். மேலும், ஆண்டு முழுவதும் எங்களுடன் பாடுபட்ட விலங்குகள் அனைத்துக்கும் அன்று ஓய்வு," என்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான ஊழியரான 34 வயது சொ. ரவிசங்கர் தமது முந்தைய பொங்கல் அனுபவங் களைப் பகிர்ந்துகொண்டார்.
மண்பானையில் பால் பொங்கியதும் 'பொங்கலோ பொங்கல்' என்று மிகுந்த சத்தத்துடன் ஆர்ப்பரித்துக் கொண்டாடிய ஊழியர்கள். படம்: திமத்தி டேவிட்