யங்கூன்: மியன்மாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. மியன்மாரின் வடமேற்கு பகுதியை புதன்கிழமை இரவு 6.9 ரிக்டர் அளவு கடும் நிலநடுக்கம் உலுக்கியதாக ஆய்வாளர்கள் கூறினர். பூமிக்கு அடியில் 122 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் பற்றிய உடனடித் தகவல் எதுவும் வெளிவரவில்லை.
நிலநடுக்கம் பல நிமிடங்கள் வரை நீடித்ததாக மியன்மார்வாசி ஒருவர் கூறியதாக ஏஎஃப்பி தகவல் கூறியது. இந்த நிலநடுக்கத்தால் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தாங்கள் வசிக்கும் நகரில் உயரமான கட்டடங்கள் எதுவும் இல்லாதததால் அதிக பாதிப்பு இல்லை என்றும் மற்றொரு குடியிருப்பாளர் கூறினார். இப்படியொரு நிலநடுக்கத்தை தான் பார்த்ததே இல்லை என்று 67 வயதான ஒரு மாது கூறினார்.
பங்ளாதேஷை உலுக்கிய நில நடுக்கத்தின்போது படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து காலில் பலத்த காயமுற்ற ஓர் இந்திய மாதுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறுகின்றனர். மியன்மாரை 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து இந்தியா, பங்ளாதேஷ் உள்ளிட்ட பக்கத்து நாடுகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. படம்: ஏஎஃப்பி