இம்மாதம் 6ஆம் தேதி சிவில் சர்விஸ் அரங்கில் சிங்கப்பூர் புத்தாக்க இந்தியக் கலையகம் மேடை ஏற்றிய 'இசை ஓவியம் 2019' புத்தாக்கம் நிறைந்த நிகழ்ச்சியாக அமைந்தது. ஒலி, ஒளியில் முதன்முறையாக தமிழில் முப்பரிமாண முறையில் நிகழ்ச்சி படைக்கப்பட்டது. கலைத் துறையைச் சேர்ந்தோர் பலரும் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். சிங்கப்பூருக்கான இலங்கையின் தற்காலிகத் தூதர் ஓ.எல். அமீர் அஜ்வத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். "புத்தாக்கம் அவசியமானது. அதன் நன்மைகளையும் பலன்களையும் ஆராய்ந்து இளையர்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்," என்றார் திரு அமீர் அஜ்வத்.
பல ஆண்டுகளாகக் கலைத்துறைக்குத் தனது மேன்மையான பங்கை ஆற்றிய திரு அசோகனுக்குக் 'கலை உழைப்பாளர்' விருது வழங்கப்பட்டது. கலைஞர்கள் பலரை உருவாக்கிய திரு ராதா விஜயன் 'தகைசால் கலைஞர்' விருது பெற்றார். சிங்கப்பூரில் 1967ல் தமிழ் இசைத்தட்டை வெளியிட்டு இன்று வரை இசைப்பணி ஆற்றி வரும் திருமதி கிரிஸ்டீனா எட்மண்ட்டுக்கு 'கவினுறு கலைஞர்' விருது கிடைத்தது.
நகைச்சுவையில் தனி முத்திரை பதித்த திரு ஆரூர் சபாபதி 'கலைச் சாதனையாளர்' விருது பெற்றார். நவீன ஒலிக்கலைத் துறையில் சிறந்து விளங்கும் ஜோசப் ஜெர்மியா இளம் புத்தாக்கப் படைப்பாளர் விருதைப் பெற்றார்.