ரயில் சேவைகள் தடைப்படும்போது பொதுமக்களின் உதவி தேவைப்படும் என்று தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் (என்டிடபெள்யூ) தெரிவித்துள்ளது.
போக்குவரத்து துறைக்கான தொண்டூழியர் சமூகத்தைச் சிங்கப்பூர் வளர்க்கவேண்டும் என்று இந்தத் தொழிற்சங்கம் கூறியது. சேவைத்தடையின்போது முன்னணி ஊழியர்களுக்கு உதவி செய்ய அத்தகைய தொண்டூழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.
போக்குவரத்து தொடர்பான இது போன்ற பல்வேறு யோசனைகள் பிப்ரவரியின் முதல் இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்படும். சைக்கிளோட்டிகளுக்கென்றே தனியாக தடங்களை அமைப்பது, உச்ச நேரங்களில் சாலை பராமரிப்பு வேலைகளைத் தடை செய்வது உள்ளிட்ட சில பரிந்துரைகளை என்டிடபெள்யூ முன்வைத்துள்ளது. இதனால் பேருந்துப் பயணங்கள் இன்னும் சீராக நிகழும் என்றும் என்டிடபெள்யூ கூறியது.
சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் எண்ணிக்கையின் அதிகரிப்புக்கு ஈடாக பேருந்து முனையங்களில் அவற்றை நிறுத்துவதற்கான இடங்களும் அதிகரிக்கப்படவேண்டும் என்றும் என்டிடபெள்யூ சொன்னது. "முதல் தர போக்குவரத்து அமைப்புக்கு முதல் தர ஊழியரணி தேவை," என்று என்டிடபெள்யூவின் நிர்வாக செயலாளரும் தஞ்சோங் பகார் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினருமான மெல்வின் இயோங் கூறினார்.