புதுடெல்லி: இந்திய அணிக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் அணித் தலைவர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் டோனி (படம்) இந்திய அணியின் தலைவராக 300 ஆட்டங்களில் பக்கேற்று சாதனை படைத்துள்ளார். டோனியின் தலைமையில் இந்தியா டி20 உலகக் கிண்ணம், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் ஆகியவற்றை வென்றது. அத்துடன் டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதல் இடத்தையும் பிடித்தது.
ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரையும் இந்தியா வென்றிருக்கிறது. 2014ஆம் ஆண்டிலும் கடந்த ஆண்டிலும் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது டோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அணித் தலைவராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இந்தியா= ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்றது.
இந்த ஆட்டம் டோனி அணித் தலைவராகக் களமிறங்கிய 300வது ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் டோனி 9 பந்துகளில் 23 ஓட்டங்கள் அடித்தார். இந்தியா 295 ஓட்டங்கள் குவித்தும் பலனில்லாமல் போனது. அந்த ஆட்டத்தில் அது தோல்வியடைந்தது. டோனியின் அணித் தலைவர் பதவியில் 300வது ஆட்டம் தோல்வியில் அமைந்தது அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது.