தன்னைக் கடத்துவதாகப் பெண் ஒருவரால் குற்றம் சாட்டப்பட்ட கோ ஜெக் ஓட்டுநருக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. கமாருஸமான் அப்துல் லதீஃப், தமக்குக் கிடைத்த அழைப்பாணையின் படத்தை 'கோ ஜெக் சிங்கப்பூர்' ஃபேஸ்புக் குழு பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். அவருக்கு எதிராகப் புகார் செய்யப்பட்டுள்ளதாக ஆணையத்தின் அழைப்பாணை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடந்தது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தும் என்று ஆணையப் பேச்சாளர் தெரிவித்தார். "இந்தப் பிரச்சனையை மேலும் விரிவாகப் புரிந்துகொள்ள, ஆணையத்தினர் ஓட்டுநரையும் பயணியையும் சந்தித்து நடந்தது பற்றி அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்," என்றும் ஆணையம் கூறியது.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் விசாரணை பற்றி அறிந்திருப்பதாக 'கோ ஜெக்' நிறுவனம் தெரிவித்தது. ஆணையத்துடன் 'கோ ஜெக்' தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று அந்நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
கமாருஸமானுக்கும் அவரது காரில் அமர்ந்திருந்த பெண் பயணிக்கும் இடையே நிகழ்ந்த வாக்குவாதத்தைக் காட்டும் காணொளி ஜனவரி 31ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் தீயென பரவியது. மின்னியல் சாலைக் கட்டண நுழைவாயிலைத் தம்மால் தவிர்க்க இயலவில்லை என்று கமாருஸமான் கூறியபோது, ஆத்திரமடைந்த பெண் பயணி அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஜனவரி 29ஆம் தேதி பீஷானில் கமாருஸமானின் காரில் ஏறிய அந்தப் பெண், கோல்மன் ஸ்திரீட்டில் இறங்க வேண்டியிருந்தது. இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் மோசமாகி, கமாருஸமான் தன்னைக் கடத்த முயல்வதாக அந்தப் பெண் தமது கைப்பேசியில் அடையாளம் தெரியாத ஒருவரிடம் கூறியதாகக் காணொளி காட்டுகிறது.