குறைந்த வருமான குடும்பத்தைச் சேர்ந்த 59 வயது திருமதி சுசீலா மருத்துவ செலவுகளைச் சமாளிக்க அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் சலுகைகள் தமக்கு உதவியாக இருப்பதாகக் கூறினார்.
"நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட எனக்கு உடல் நலம் அடிக்கடி குன்றிவிடும். எனினும், சாஸ் அட்டை வைத்திருப்பதனால் எனக்கு பெரிய செலவுகள் இல்லை," என்றார் அவர்.
"நீரிழிவு நோய் எனக்கு தற்போது கட்டுக்குள் உள்ளதால் பல சிக்கல்கள் இல்லை. எனினும், சில ஆண்டுகளில் பல சிக்கல்கள் ஏற்படலாம். 'பார்கின்சன்ஸ்' எனப்படும் நரம்பு மண்டல தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட எனது கணவருக்கு நாளடைவில் மேலும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதென மருத்துவர்கள் கூறியுள்ளதால் சிக்கலான நாட்பட்ட நோய்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனால், வயதான காலத்தில் பிள்ளைகளுக்கு ஒரு பாரமாக இல்லாமல் நம்முடைய செலவுகளை நாமே சமாளித்துக்கொள்ள அரசாங்கம் வழிவகுக்கிறது," என்றார் துப்புரவாளராகப் பணிபுரியும் திருமதி சுசீலா.
தொகுப்பு:
ப.பாலசுப்பிரமணியம், இர்ஷாத் முஹம்மது, வைதேகி ஆறுமுகம்