சென்னை: படிப்படியாக மதுவிலக்கு என அதிமுக கூறுவது ஏமாற்று வேலை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். திமுக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் சாராய ஆலைகளை நடத்தி வருவதாக சென்னையில் தேர்தல் பிரசாரத்தின்போது அவர் சுட்டிக் காட்டினார். "ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் என நாங்கள் அறிவித்த பின்னர்தான், திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையில் அதை அறிவித்துள்ளனர்.
இதுவரையில் ஆட்சி புரிந்த திமுக, அதிமுக ஆட்சிக் காலத்தில் நல்லது ஏதும் நடக்கவில்லை. மாறாக ஊழலும் மதுவும் லஞ்சமும்தான் அதிகரித்துள்ளன. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அதிகமாக பேசுவார்கள். ஆனால், எதையும் செயல்படுத்தமாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் கட்சித் தலைமையான டெல்லியில்தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்," என்றார் திருமாவளவன்.