லிம் சூ காங் சீன இடுகாட்டிற்கு அருகிலுள்ள தாவரங்கள் திங்கட்கிழமை (மார்ச் 4) காலை தீப்பிடித்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. அந்தத் தீ பின்னர் செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு மணிக்கு அணைக்கப்பட்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
குப்பைப்பொருட்களாய் அருகருகே குவிந்து கிடந்த மரக்கட்டைகள் தீப்பற்றிய தகவல் திங்கட்கிழமை காலை சுமார் 7 மணிக்குக் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அந்தத் தீ கிட்டத்தட்ட ஒரு காற்பந்து திடலுக்கு நிகரான பரப்பளவில் பரவியது.
நேற்று இரவு முழுவதும் கிட்டத்தட்ட 52 தீயணைப்பாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது. அண்மை சில ஆண்டுகளில் நிகழ்ந்த தாவரத் தீச்சம்பவங்களில், தீயை அணைக்க ஆக அதிக நேரம் தேவைப்பட்ட சம்பவங்களில் ஒன்றாக இது இருந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. ஆதரவு தெரிவித்த பொதுமக்களுக்குக் குடிமைத் தற்காப்புப் படை அந்தப் பதிவில் நன்றி தெரிவித்தது.
2018ஆம் ஆண்டில் சுமார் 600 தாவரத் தீச்சம்பவங்கள் நிகழ்ந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்ட வருடாந்திர புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.