நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் நேற்று திடீரென பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த அவர் மாலை 5.34க்கு மயங்கி விழுந்தார் என்று பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவித்தது. அமைச்சர் ஹெங் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு 'சிடி ஸ்கேன்' செய்ததில் அவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. "அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
திரு ஹெங்கின் உடல்நலம் குறித்து அக்கறையுடன் உடனடியாக தமது ஃபேஸ்புக்கில் பதிவு செய்த பிரதமர் லீ சியன் லூங், "சுவீ கியட் விரைவில் நலமாகி விடுவார் என்று நம்புகிறேன். எனது குழுவில் அவர் மதிப்புமிக்க உறுப்பினர்," என்று அதில் எழுதியிருந்தார். வாராந்திர கூட்டத்தின்போது திரு ஹெங் திடீரென மயங்கி விழுந்ததாக பிரதமர் தெரிவித்தார். "அமைச்சரவையில் இருந்த மூன்று மருத்துவர்கள் அவரை உடனே கவனித்தனர். "ஆம்புலென்ஸ் அழைக்கப்பட்டது.
அமைச்சர் ஹெங், டான் டொக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிடி ஸ்கேன் அவர் பக்கவாதத்தால் தாக்கப்பட்டுள்ளதைக் காட்டியது. மருத்து வர்கள் அவருக்குச் சிகிச்சை அளிக்கின்றனர்," என்று விவரித்தார் திரு லீ. அவர் நலம் வேண்டி பிரார்த் தனை செய்வதாக அதிபர் டோனி டான் கெங் யாம் தெரிவித்துள்ளார். துணைப் பிரதமர்கள் டியோ சீ ஹியனும் தர்மன் சண்முகரத்னமும் திரு ஹெங் விரைவில் குணம் அடைய வேண்டுவதாகக் கூறினர்.