தோக்கியோ: உலகிலேயே ஆக வயதான முதியவர் தமது 112வது வயதில் மரணம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர். யாசுடாரோ கோய்டி என்ற அந்த ஜப்பானியர் 1903 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்தவர். உலகிலேயே ஆக வயதான முதியவர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தவர்.
கின்னஸ் சாதனை விருதைப் பெற்றுக்கொண்டபோது அந்த முதியவர் தமது நீண்ட கால ஆயுளுக்கான ரகசியம் பற்றிக் கூறினார். "சிகரெட் புகைக்கும் பழக்கம் இல்லை. மதுபானம் எதுவும் அருந்துவதில்லை. மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன். இவைதான் எனது நீண்ட கால ஆயுளின் ரகசியங்கள்," என்று யாசுடாரோ அப்போது கூறினாராம்.
அவரது இதயம் செயலிழந்ததால் அவர் மரணம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர். அவர் மரணம் அடைந்துவிட்ட நிலையில் உலகிலேயே தற்போது ஆக வயதான முதியவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை.
உலகிலேயே ஆக வயதான மூதாட்டி என்ற பெயரை அமெரிக்க மாதான சுசானா முசாட் ஜோன்ஸ் பெற்றுள்ளார். இவருக்கு 116 வயதாகிறது. ஜப்பானிய மாது மிசோ மரணம் அடைந்த பின்னர் இந்த விருதை ஜோன்ஸ் பெற்றுள்ளார்.
உலகிலேயே ஆக வயதான முதியவர் என்று அறிவிக்கப்பட்ட யாசுடாரோ கின்னஸ் சாதனை விருதைப் பெற்றுக்கொண்டார். அவர் தனது 112 வயதில் மரணம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படம்: (கோப்புப் படம்) ஏஎஃப்பி