தாய்லாந்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் நிகழ்ந்த முதல் தேர்தல் திங்கட்கிழமை காலை தீர்மானமின்றி முடிந்துள்ளது. அந்நாட்டின் ராணுவத்தை ஆதரிக்கும் ஆளும் கட்சியான 'பலாங் பிரசாரத்' கட்சி, ஆக அதிகமாக 7.5 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான 'பியூ தாய்' கட்சிக்கு ஏழு மில்லியன் வாக்குகள் கிட்டின.
ஆயினும், அதிக நாடாளுமன்ற இடங்களை 'பியூ தாய்' கட்சி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.
பியூ தாய் கட்சிக்கு 124 இடங்களும், பலாங் பிரசாரத் கட்சிக்கு 95 இடங்களும், பூமிஜைதாய் கட்சிக்கு 39 இடங்களும் கிடைத்திருப்பதாக தாய்லாந்தின் 'எம்சிஓடி' தொலைக்காட்சி நிறுவனம் முன்னோடிக் கணிப்புகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளது. முன்னையப் பிரதமர் அபிசிட் வெஜ்ஜாஜீவாவின் ஜனநாயகக் கட்சி 33 இடங்கள் மட்டுமே பெற்றதைத் தொடர்ந்து அவர் அந்தக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதாக 'எம்சிஓடி' தெரிவித்தது.
தேர்தலுக்கு முன்னர், தங்களது தலைவர்களைக் கவனத்துடன் தேர்ந்தெடுக்குமாறு அந்நாட்டின் மன்னர் மஹா வஜ்ஜிலொங்கோர்ன் மக்களிடம் தெரிவித்தார்.