'என்னமோ நடக்குது' படத்தின் வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர் வி.வினோத்குமார், நாயகன் விஜய் வசந்த், இயக்குநர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர் மீண்டும் 'அச்சமின்றி' படத்தின் மூலம் இணைகிறார்கள். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார். நாயகன் விஜய் வசந்த் ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், பரத்ரெட்டி, நித்தியா, ஜெயகுமார், தலைவாசல் விஜய், ஷண்முக சுந்தரம் மற்றும் குழந்தை நட்சத்திரங்களாக ஹிருதிக், நிகிலா ஸ்ரீ ஆகியோரும் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர். கௌரவ வேடத்தில் ரோகிணி நடிக்கிறார்.
"இது வணிகம் சார்ந்த சமூகத்தைப் பிரதிபலிக்கின்ற படம். இன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெற்றோர்களுக்கு சமூகத்தின் மீது என்ன அக்கறை இருக்கிறது? சமூகத்திற்கு மக்கள் மீது என்ன மாதிரியான அக்கறை இருக்கிறது என்பதை இப்படம் விவரிக்கும்," என்கிறார் ராஜபாண்டி.