புதுடெல்லி: மத்திய அரசின் ஆசிரியர் கல்வியியல் நிறுவனத்தில் தமிழுக்கான பாடப்பிரிவு இந்த ஆண்டும் துவக்கப்படாதது தமிழ் ஆர்வலர்களை வெகுவாக அதிருப்தி அடைய வைத்துள்ளது. இத்தகைய நிலை ஏற்பட அங்கு பணியாற்றும் சில பேராசிரியர்களின் உள்நோக்கத்துடனான முடிவே காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். 1947ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர் கல்வியியல் நிறுவனத்தில் தொடக்கத்தில் ஆங்கிலம், இந்தி, உருது, சமஸ்கிருதப் பாடங் கள் துவக்கப்பட்டு பிறகு பஞ்சாபி, வங்காள மொழி, தமிழ் ஆகிய மொழிகளும் சேர்க்கப்பட்டன.
ஒவ்வோர் ஆண்டும் பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்ட நிலையில், தமிழ்ப் பிரிவுக்கு போது மான மாணவர்கள் சேரவில்லை.
இதையடுத்து 2014ஆம் ஆண்டு தமிழ் கல்வியியல் பிரிவு மூடப்பட்டது. ஆனால் இதை மொழி ஆர்வலர்கள் கண்டித்த போதிலும், கடந்தாண்டு தமிழ் பாடங்கள் துவங்கப்படவில்லை.
இந்நிலையில் சமூக, மொழி ஆர்வலர்கள் பலமுறை எடுத்துக் கூறியும் இந்த ஆண்டு தமிழ் மொழிப் பாடப் பிரிவு துவங்கப் படவில்லை. முதுநிலை படிப்பிலும் தமிழ் இடம்பெறவில்லை.