இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா, ஏழாவது கட்டப் பொதுத்தேர்தலை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று அம்மாநிலத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தின்போது தொண்டர்கள் அவர் மீது பூக்களைத் தூவி காங்கிரசுக்கு ஆதரவான வாசகங்களை உற்சாகத்துடன் முழங்கினர்.
ராகுல் காந்தியின் தலைமையில் தற்போதுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் சமயத்தில் புத்துயிரூட்ட பிரியங்கா தேர்தலில் களமிறக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் அகிலேஷ் பிரதாப் 'பிபிசி' செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். பிப்ரவரியில் முதன்முதலாக பிரியங்கா பிரசார மேடை ஏறியபோது கட்சித் தொண்டர்கள் பலர் உற்சாகம் அடைந்ததாக பிபிசியின் கட்டுரை குறிப்பிட்டது.
மக்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் கொண்டுள்ள பிரியங்கா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சவாலாக இருப்பார் என கருதப்படுகிறது. ஆயினும், தன் மீதான மக்கள் அபிமானத்தை காங்கிரசுக்கு வாக்குகளாக மாற்ற பிரியங்காவால் இயலுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது.