திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பரைக் கிராமத்தில், தந்தை இறந்த தகவலை மறைத்து, சகோதரியின் திருமணத்தை அண்ணன் நடத்திவைத்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், 67, வசந்தா, 51, தம்பதியின் மகளான 31 வயது கனிமொழிக்கும் நன்னி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகுரு, 34, என்பவருக்கும் இம்மாதம் 17ஆம் தேதி லால்குடியில் திருமணம் நடந்தது. அதற்கு ஒருமாதம் முன்னதாக தலையில் கட்டி ஏற்பட்டதால் திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த நடராஜன் இம்மாதம் 16ஆம் தேதியே மரணமடைந்துவிட்டார்.
தந்தையைக் கவனித்துக்கொண்டு மருத்துவமனை யிலேயே இருந்துவந்த கனிமொழியின் அண்ணன் உதய குமார், 40, தந்தை இறந்த செய்தியைத் திருமணத்துக்குப் பிறகுதான் உறவினர்களிடம் தெரிவித்தார். மணமக்கள் உட்பட பலரும் மருத்துவமனைக்குச் சென்று நடராஜன் உடலை எடுத்துவந்து ஆகவேண்டியவற்றைக் கவனித்தனர்.