திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நெல் ஜெயராமன். அரிய வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி கடந்த ஆண்டு உயிரிழந்தார். நெல் ரகங்களைத் தேடிக் காத்த நெல் ஜெயராமன் குறித்த செய்தியை இந்த ஆண்டு தமிழக அரசு 12ஆம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் பாடமாகச் சேர்த்திருக்கிறது.
9ஆம் வகுப்பு மட்டுமே படித்த ஜெயராமன், தன் வாழ்நாளையே விவசாயத்துக்காக அர்ப்பணித்த விதத்தில் பாடமாகவே மாறி இருக்கிறார்! இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான சசிகுமார், இவருடைய வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதுகுறித்து அவரது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘இன்று பாடமாக வந்திருக்கும் உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்பும் விரைவில் படமாக வரும். அதற்கான பணிகளில் நாங்கள் இறங்கி இருக்கிறோம்,” என்று பதிவிட்டிருக்கிறார்.