ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் இந்திய விசாரணை முகவையான என்ஐஏ கோயமுத்தூரில் ஏழு இடங்களில் இன்று தேடுதல்வேட்டை மேற்கொண்டது.
ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கேரளாவில் நடத்தப்பட்ட தேடல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் பற்றிய தகவல் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.
ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு டையதாக சந்தேகிக்கப்படும் இந்த நபர்களின் தலைவர் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப் பட்ட ஐஎஸ் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஸஹ்ரான் ஹாஷிமுடன் ஃபேஸ்புக் வழியாக தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை அன்பு நகர், போடனூர், குனியமுத்தூர் உட்பட 7 இடங்களில் இன்று காலை 7 மணிக்கே தேடுதல்பணி தொடங்கியதாகக் கூறப்பட்டது.
முகம்மது அஸாருதீன் என்பவர் தென்னிந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதற்காக கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் போராளிகளைச் சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30ஆம் தேதி அந்த நபர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
ஒரு பெண் உட்பட ஒன்பது தற்கொலைப் படையினர் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம் ஒன்றில் தாக்குதல் நடத்தியதில் 253 பேர் பலியாகினர். அந்தத் தற்கொலைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ஐஎஸ் சந்தேக நபர்களுக்கு தொடர்பிருக் கிறதா என்று ஆராய இலங்கைக்குச் சென்ற இரண்டு என்ஐஏ அதிகாரிகள் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சில பயங்கரவாதிகள் காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் சில பகுதிகளுக்குள் ஊடுருவி இருப்பதாகவும் கூறப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையதாக ரியாஸ் அபூபக்கரை பாலக்கட்டில் என்ஐஏ கைது செய்தது.
கேரளாவில் வெளிநாட்டினர் விரும்பிப் பார்க்கும் சுற்றுலாத் தளங்களில் தற்கொலைத் தாக்குதல் நடத்த அபூபக்கர் திட்டமிட்டதாக என்ஐஏ குற்றஞ்சாட்டியது.
ஸஹ்ரான் ஹஷிமின் உரைகள், காணொளிகளால் 29 வயது அபூபக்கர் ஈர்க்கபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட அவர் தம்மை மனதளவில் தயார்ப்படுத்திக் கொண்டிருந்ததாகச் சொல்லப்பட்டது.