அமெரிக்காவும் சீனாவும் நம்பிக்கையை ஏற்படுத்த உயர்மட்ட அளவில் செயலாற்ற வேண்டும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி உள்ளார். இவ்வாரத்தில் ஒசாகா நகரில் ஜி-20 உச்ச நிலைச் சந்திப்பு நடக்க இருக்-கும் வேளையில் அவ்விரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பதற்றத்தைத் தணிப்பதன் மூலம் உலகத் தலைவர்கள் முன்னேற்றம் காண்பார்கள் என தாம் நம்புவதாகவும் திரு லீ குறிப்பிட்டார்.
'நிக்கேய் ஏஷியன் ரிவியூ' சஞ்சிகைக்கு நேற்று பேட்டியளித்த திரு லீயும் உச்சநிலைச் சந்திப்பில் பங்கேற்க இருக்கிறார்.
இந்நிகழ்வின்போது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இருதரப்பு சந்திப்பை நடத்தக்கூடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் பதற்றம் உலக நிதி நெருக்கடியைத் தோற்றுவிப்பதுபோலத் தெரியவில்லை என்றும் நீண்டகாலப்போக்கில் நெருக்கடி ஏற்படலாம் என்றும் திரு லீ குறிப்பிட்டார். அந்தப் பதற்றம் தொழில்நுட்பத்திலும் சந்தைகளிலும் பிளவை ஏற்படுத்தும் என்றும் அது உலகத்திற்கு மோசமான விளைவாக அமையும் என்றும் அவர் கூறினார்.
உலகின் இரு பெரிய பொருளியல் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பதற்றம் உலக வர்த்தகத்தைப் பாதித்திருப்பதோடு பயனீட்டாளர்களின் நம்பிக்கையைக் குலைத்திருப்பதாகவும் பிரதமர் லீ சொன்னார். இதன் விளைவாக வர்த்தகங்களும் முதலீடுகளும் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக வேலை வாய்ப்புகளும் பாதிக்கப்படக்கூடும் என்றார் அவர்.
அப்படிப்பட்ட நிலைமையால் வர்த்தகப் பூசலுக்கு தீர்வு ஏற்பட்டுவிடாது என்றும் தொழில்நுட்பத்திலும் சந்தைகளிலும் அவற்றின் மீதான நம்பிக்கையிலும் பிளவு ஏற்படக்கூடிய நிலை வரலாம் என்றும் திரு லீ குறிப்பிட்டார். கட்டமைப்பு தொடர்பான இந்நிலைமை பல்லாண்டுகளுக்கு நீடிக்கும் என்று கூறிய அவர், அதன் விளைவுகள் நிதி நெருக்கடியைக் காட்டிலும் மோசமானதாக இருக்கும் என்றார்.
"எனவே நன்னம்பிக்கையை உருவாக்க அமெரிக்காவும் சீனாவும் ஒன்றோடொன்று உயர்மட்ட அளவில் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அவ்விரு நாடுகளும் எளிமையான அம்சங்களில் தொடங்கி படிப்படியாக கடின விவகாரங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடலாம்," என்றார் திரு லீ. சிங்கப்பூர் வர்த்தகம் பற்றி குறிப்பிட்ட திரு லீ வட்டார விரிவான பொருளியல் பங்காளித்துவ உத்தேச உடன்பாடு போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் தடையற்ற வர்த்தகத்தை சிங்கப்பூர் ஊக்குவித்து வருவதாகக் கூறினார்.