கோலாலம்பூர்: பாலியல் காணொளி சர்ச்சையில் சிக்கியுள்ள மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி, ‘பாலிகிராஃப்’ எனப்படும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்பட மறுத்துவிட்டார்.
தமது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அந்தக் காணொளி வெளியிடப்பட்டுள்ளதாக திரு அஸ்மின் அலி கூறியுள்ளார்.
அது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் செய்துவிட்டதாகவும் சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
திரு அஸ்மின் அலிக்கு பாலிகிராஃப் சோதனை நடத்த வேண்டும் என்று அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் லொக்மான் நூர் அடாம் அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கிடையே, காணொளி சர்ச்சை காரணமாக திரு அஸ்மின் அலி பதவி விலகத் தேவையில்லை என்று மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
ஒரே பாலின உறவு கொண்டு அது தொடர்பான காணொளி சர்ச்சையில் சிக்கும் அளவுக்கு திரு அஸ்மின் அலி முட்டாள் அல்ல என்று குறிப்பிட்ட டாக்டர் மகாதீர், அவருக்குக் கெட்ட பெயர் உண்டாக்க யாரோ சதி செய்துள்ளதாக கூறினார்.