பணம் தேவைப்பட்ட பதின்ம வயதினர் மூவர் பாலியல் தொழிலாளிகளிடம் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் விழிப்புணர்வத் தொடரான குற்றக் கண்காணிப்பு (க்ரைம்வாட்ச்) காட்சிகளால் உந்தப்பட்ட அம்மூவரும் அதனைப்போலவே செயல்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தியோஃபிலஸ் ஜெபராஜ், 16, ஜான் கரன் கருணாகரன், 18, மற்றொரு 14 வயது சிறுவர் ஆகியோர் பாலியல் தொழிலாளர்களைக் குறிவைப்பதே பணம் கொள்ளையடிக்கப் பாதுகாப்பான வழி என்று கருதினர்.
இம்மூவரில் மூத்த இருவரும் ஆயுதம் தாங்கிய கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தை நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர். ஆக இளையவருக்க 14 வயது என்பதால் அவரைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவர் குற்றவாளி என்ற மே 15ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் அவருக்கான தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை. தியோஃபிலஸ் ஏற்கெனவே வேறொரு குற்றத்துக்காக கடந்த 2017 அக்டோபரில் 18 மாத தண்டனையாக சிங்கப்பூர் சிறுவர் இல்லத்துக்கு அனுப்பப்பட்டவர் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
தற்காலிக விடுப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி இல்லத்திலிருந்து வெளியே வந்த அவர் மீண்டும் அங்கு திரும்பத் தவறினார். மற்றவரான ஜானும் சில குற்றங்களுக்காக நன்னடத்தைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சந்தித்த மூவரும் பண சிரமம் பற்றி பேசிக்கொண்டனர். அப்போது குற்றக் கண்காணிப்பு தொலைக்காட்சித் தொடரின் காட்சிகள் தியோஃபிலஸின் நினைவில் தோன்றின. அது குறித்து ஆலோசித்த காட்சிகளில் வருவதைப்போல மூவரும் விலைமாதர்களைக் குறிவைக்கத் தொடங்கினர்.
உட்லண்ட்ஸில் வாடகை அறையில் தங்கி இருந்து சீன நாட்டைச் சேர்ந்த இரு விலைமாதர்களிடம் கொள்ளையடிக்க முடிவு செய்த அவர்கள் கடந்த ஆண்டு செம்படம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு அந்த வீட்டுக்குச் சென்றனர். 36 வயதான மாது அம்மூவரையும் உள்ளே அழைத்தார். அப்போது பழம் வெட்டும் கத்தியை நீட்டிய தியோஃபிலஸ் அந்தப் பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டினார். பின்னர் அறையை சோதனையிட்டு $100 ரொக்கப் பணத்தை எடுத்துக் கொண்டு மூவரும் தப்பி ஓடினர். சம்பவம் நிகழ்ந்த நான்காவது நாளில் செப்டம்பர் 9ஆம் தேதி விலைமாதர்களில் ஒருவர் இது குறித்து போலிசில் புகார் செய்தார்.
இந்த வழக்கு மீண்டும் ஜூலை 18ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.