இலங்கையின் பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதியர் கிட்டத்தட்ட ஐந்து கிலோகிராம் தங்கத்தைக் கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது சட்டை மற்றும் கால்சட்டைப் பைகளில் தங்க ஆபரணங்கள் நிறைந்திருந்ததாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைதான அந்தத் தம்பதியரில் ஒருவருக்கு 45 வயது; மற்றொருவருக்கு 55 வயது.
சிங்கப்பூரில் அந்தத் தம்பதியர் நாணய வியாபார உரிமையாளர்களாக இருப்பதாக ‘அடாடெரானா’ என்ற இலங்கை செய்தி இணையத்தளம் குறிப்பிடுகிறது. இவ்வாண்டில் மட்டும் அவர்கள் ஆறு முறை இலங்கைக்குச் சென்றிருப்பதாகத் தகவல் வெளியானது. விசாரணை தொடர்கிறது.