ரசிகர்களின் வன்முறை தொடர்ந்தால் இங்கிலாந்து, ரஷ்யா அணிகள் வெளியேற்றப்படும் என்று ஐரோப்பிய காற்பந்து கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. யூரோ காற்பந்துத் தொடரில் இங்கிலாந்து-ரஷ்யா இடையிலான பரபரப்பான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. மைதானத்திற்குள்ளேயும் வெளியேயும் இங்கிலாந்து, ரஷ்ய ரசிகர்கள் வன்முறையில் குதித்தனர். இந்த சம்பவத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மூன்று நாட்களாக நீடித்த ரசிகர்களின் வன்முறையால் கடும் கோபமடைந்த ஐரோப்பிய காற்பந்து கூட்டமைப்பு, "ரசிகர்களின் வன்முறை நீடித்தால் இங்கிலாந்து, ரஷ்ய அணிகளை ஐரோப்பிய காற்பந்து தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்ய நேரிடும்," என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் யூரோ காற்பந்து விளையாட்டுகள் நடைபெறும் இடங்களைச் சுற்றி மதுவிற்கு அந்நாட்டு அரசாங்கம் தடைவிதித்துள்ளது.