காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்காகப் பிரதமர் நரேந்திர மோடி தமது உதவியை நாடியதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தவறாகக் கூறியதற்குத் தாம் இந்தியத் தூதரிடம் மன்னிப்பு கேட்டதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிரெட் ஷர்மன் தெரிவித்திருக்கிறார்.
“காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை வெளிநாட்டு மத்தியஸ்தரை இந்தியா ஏற்றுக்கொள்ளாது என்பது தெற்காசிய வெளியுறவு கொள்கைகளைப் பற்றி தெரிந்த அனைவரும் அறிந்ததே. இந்த யோசனையைப் பிரதமர் மோடி முன்வைத்திருக்க மாட்டார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். டிரம்ப்பின் கூற்று குறைபாடுள்ளதாகவும் மருட்சிமிக்கதாகவும் உள்ளது,” என்று திரு ஷர்மன் டுவிட்டரில் கூறியுள்ளார்.
திங்கட்கிழமையன்று அமெரிக்காவின் அதிபர் அலுவலகத்திற்குச் சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் திரு டிரம்ப் பேசியபோது, காஷ்மீர் விவகாரத்தில் திரு மோடி தம்மிடம் மத்தியஸ்த உதவியை நாடியதாகத் தெரிவித்தார். இதனை இந்திய வெளியுறவு அமைச்சு உடனே மறுத்தது.