சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முழுநேர தேசிய சேவையாளர் கார்ப்பரல் கோக் யுவென் சின், கடந்த ஆண்டு மே 13ஆம் தேதி துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தின் நீரேற்றுக் கிணற்றில் தள்ளிவிடப்பட்ட சம்பவத்தின் தொடர்பில் இரு அதிகாரிகளுக்கு இடையே நிகழ்ந்த வாக்குவாதத்தைப் பதிவுசெய்த காணொளி ஒன்று நேற்று நீதிமன்றத்தில் காட்டப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த அன்றைய இரவு இரு அதிகாரிகளிடம் போலிஸ் விசாரணை செய்தபோது அந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலிஸ் அதிகாரி ஒருவர் தமது சீருடையில் அணிந்திருந்த கண்காணிப்புக் கருவி, குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளின் வாக்குவாதத்தைப் பதிவு செய்தது.
கார்ப்பரல் கோக்கை கிணற்றில் தள்ளிவிட ஒருவர் மற்றொருவரிடம் கூறினாரா என்பது பற்றியே அன்று அவர்களுக்கிடையே விவாதம் நடந்தது.
அந்தக் காணொளியில் ஸ்டாஃப் சார்ஜண்ட் முகம்மது நூர் ஃபத்வா மஹ்மூட்டும் முதலாம் வாரண்ட் அதிகாரி முகம்மது ஃபாரிட் முகம்மது சாலேவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கார்ப்பரல் கோக்கை கிணற்றில் தள்ளிவிட இருவரில் யார் உத்தரவு பிறப்பித்தார் என்பதில் இருவருக்கு இடையேயும் இணக்கம் ஏற்படவில்லை.
இந்த வழக்கு விசாரணை இன்று தொடரும். இதில் நூர் ஃபத்வா குறுக்கு விசாரணையை எதிர்நோக்கவுள்ளார்.