வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை வாய்ப்பு முகவை நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவருக்கு 17,300 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர் இழப்பீடு கொடுக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த உரிமதாரர் குலாப் சிங், அளவுக்கு அதிகமாக வேலைவாய்ப்புக் கட்டணத்தை வசூலித்ததுடன் முறையான ரசீதுகளைக் கொடுக்காமல் இருந்தார். மேலும், வேலை வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகத் தன்னை நாடிவந்த வெளிநாட்டவர்களிடம் கூறி அவர்களிடம் பணத்தை அவர் பெற்றதையும் நீதிமன்றம் உறுதி செய்தது.
2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் இடையே வெளிநாட்டு ஊழியர்கள் இருவரிடம் 51 வயது சிங் மொத்தம் 1,664 வெள்ளியை அளவுக்கு அதிகமாக வாங்கியதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. மற்றொரு வெளிநாட்டு ஊழியருக்கு வேலை வாங்கித் தருவதாக உத்தரவாதம் அளித்து அவரிடமிருந்து 5,284 வெள்ளியைப் பெற்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.
சிங்கின் வேலை முகவை நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்வதாகவும் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான சட்டத்தை மீறும் முதலாளிகளையும் தனிநபர்களையும் தெரிந்த பொதுமக்கள் தன்னிடம் www.mom.gov.sg என்ற இணையத்தளம் வழியாகத் தெரிவிக்க மனிதவள அமைச்சு ஆலோசனை விடுத்துள்ளது.