புதுடெல்லி: இந்தியாவில் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பவர்கள் முறைப்படி படித்து, இந்திய மருத்துவ மன்றத்தில் பதிவுசெய்திருக்க வேண்டும். நாடு முழுவதும் சுமார் 11,46,000 பேர் பதிவு செய்து இருக்கிறார்கள். ஆனால், முறைப்படி மருத்துவக் கல்வியை முடிக்காமல் நாடு முழுவதும் ஏராளமானோர் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பவர்களில் 57.3 விழுக்காட்டினர் முறைப்படி படிக்காதவர்கள் என்று இந்திய சுகாதாரத்துறை கூறி இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனம் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் 1,456 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில்தான் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் கவனம் செலுத்தி உரிய சட்டங்களை உருவாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.