அங் மோ கியோவில் உள்ள ஒரு நகைக்கடையில் நேற்று முன்தினம் கொள்ளையடிக்கப்பட்டதில் சந்தேக நபர் கிட்டத்தட்ட $100,000 மதிப்புள்ள பொருட்களுடன் தப்பினார்.
அங் மோ கியோ அவென்யூ 10, புளோக் 574ல் உள்ள ஹாக் சியோங் ஜேட் & ஜூவல்லரி நகைக்கடைக்கு வெளியே, நேற்று முன்தினம் மாலை நான்கு மணியளவில் கறுப்பு ஆடை அணிந்த, 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவரைப் பார்த்ததாக பக்கத்து கடையின் உரிமையாளர் கூறினார்.
நகைக்கடை உரிமையாளர்களில் ஒருவர் “தோலோங், தோலோங் (உதவுங்கள், உதவுங்கள்), எங்கள் பொருட்களை எடுக்காதீர்கள்!” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது தம் காதில் விழுந்ததாகக் கூறினார். கறுப்பு ஹெல்மெட் அணிந்திருந்த சந்தேக நபர், நீல நிற ஜாக்கெட், கறுப்பு கால்சட்டை அணிந்து கையில் கறுப்பு பை ஒன்றையும் ஏந்தியிருந்தார். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஆயுதம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தால் போலிசாரை அணுகுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.