சிங்கப்பூரில் புத்தம்புதிய கிட்டப்பார்வை பராமரிப்பு நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. கிட்டப்பார்வை குறித்த ஆய்வு, மருத்துவ ஆலோசனை உள்ளிட்ட பலதரப்பட்ட சேவைகள் இங்கு வழங்கப்படும்.
சிங்கப்பூர் தேசிய கண் நிலையத்தைச் சேர்ந்த மருத்துவர்களால் இந்த நிலையம் நடத்தப்படும். விலை கட்டுப்படியான, முழுமையான கண் சுகாதாரப் பராமரிப்பை இது வழங்கும். குறிப்பாக, மோசமான கிட்டப்பார்வை பிரச்சினையால் அவதியுறுபவர்கள் இதனால் பலனடைய முடியும்.
போக்குவரத்து, சுகாதார மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் இந்த நிலையத்தை நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து அதன் வசதிகளைப் பார்வையிட்டார்.
சிங்கப்பூர் மக்களிடையே, குறிப்பாக இளையர்களிடையே நிலவும் கிட்டப்பார்வை பிரச்சினையை எதிர்கொள்ள இத்தகைய நிலையங்கள் கூடுதலான எண்ணிக்கையில் சிங்கப்பூரின் பல பகுதிகளில் திறக்கப்பட வேண்டும் என்று டாக்டர் லாம் கேட்டுக்கொண்டார்.
பிடோக் நார்த் வட்டாரத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தில் கண் மருத்துவர்களுடனும் பொதுமக்களுடனும் பேசிய அவர், கிட்டப்பார்வை பிரச்சினை தொடர்பில் புதிய வகை பராமரிப்பு முறைகளை ஆராய்வதற்கான தேவை இருப்பதாகச் சொன்னார்.
“மூப்படைந்துவரும் மக்கள்தொகையில் கண் சுகாதாரப் பராமரிப்புத் தேவை அதிகரிக்கும் அதே வேளையில், கிட்டப்பார்வைப் பிரச்சினையும் அதிகரித்து வருவதால் இப்பிரச்சினையைச் சமாளிக்க கண் நிபுணர்களை அதிகம் சார்ந்திருப்பது தாக்குப்பிடிக்கக்கூடியதாக இருக்காது,” என்று டாக்டர் லாம் கூறினார்.
சிங்கப்பூர் மக்களில் அதிகமானோரிடம் கிட்டப்பார்வைப் பிரச்சினை இருப்பதால் சிறப்பு நிபுணத்துவ நிலையங்களுக்கான தேவை அதிகம் இருப்பதாக அவர் சொன்னார்.
“தொடக்கநிலை 6க்கு செல்வதற்குள் 65 விழுக்காடு மாணவர்களுக்கு கிட்டப்பார்வை பிரச்சினை ஏற்பட்டுவிடுகிறது. இளையர்களில் 83 விழுக்காட்டினருக்கு இப்பிரச்சினை உள்ளது. எனவேதான், உலகின் கிட்டப்பார்வை தலைநகரமாக சிங்கப்பூர் கருதப்படுகிறது,” என்றார் அவர்.
இவ்வாண்டு ஜூன் மாதம் இந்த நிலையம் செயல்படத் தொடங்கி யதிலிருந்து கிட்டப்பார்வை பிரச்சினையுடைய ஏறக்குறைய 600 பேருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒவ்வொரு காலாண்டிலும் 1,000 முதல் 2,000 நோயாளிகள் கண் மருத்துவ ஆலோசனைக்காக இங்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.