சேலம்: தமிழகத்தில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கப்போவதாக முதலமைச்சர் பழனிசாமி நேற்று அறிவித்தார். மக்கள் அதிகாரிகளை அணுகுவதை விட அதிகாரிகளே மக்களை நாடி மனுக்களைப் பெற்று பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வுத் திட்டத்தை, முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
சேலம் மாவட்டம் வனவாசியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் மக்களிடம் இருந்து பல மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார். வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை உள்ளிட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் ஒரு குறிப்பிட்ட நாளில் வார்டு வாரியாகச் சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறுவார்கள்.
மனுக்கள் கணினிகளில் பதிவிடப்பட்டு தொடர்புடைய துறைகளுக்கு ஒரு வாரத்துக்குள் அனுப்பப்படும். மனுக்களில் உள்ள கோரிக்கைகள் தொடர்பாக ஒரு மாதத்துக்குள் தீர்வு காணப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார். மாவட்டங்களில் அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்கள் நடத்தப்பட்டு, சாலைகள், தெரு விளக்குகள், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகள் தொடர்பான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் தகுதியான 5 லட்சம் முதியோருக்கு புதிதாக ஓய்வு ஊதியம் வழங்கப்படும் என்றும் மேட்டூர் உபரிநீரை 565 கோடி ரூபாய் மதிப்பில் 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.
எடப்பாடி தொகுதியில் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டதன் மூலம் 234 தொகுதிகளிலும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முதலமைச்சர், இந்தத் திட்டத்திற்காக ஒவ்வொரு வட்டத்துக்கும் தலா 25,000 ரூபாய் வீதம் 76 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எல்லாருக்கும் வீடு என்ற நிலை உருவாகும் என்றும் முதல்வர் உறுதி கூறினார்.