ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 4ல் நேற்றுக் காலை ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்துவிட்டதால் ஒரு சாலையின் பகுதி அடைப்பட்டுவிட்டது. அதனால் அந்தப் பகுதியை வாகன உரிமையாளர்கள் பயன்படுத்த முடிய வில்லை. அங்கு 704வது புளோக்குக்கு அருகே இருந்த அந்த மரம் ஏன் சாய்ந்து விழுந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்த புளோக்கிற்கு எதிரே இருக்கும் ஒரு புளோக்கில் ஒரு வீட்டில் அதிகாலை சுமார் 2.30 மணிக்கு தொலைக் காட்சி பார்த்துக்கொண்டிருந்த மெல்வின் கோ, 32, என்ற ஆசிரியர் திடீரென்று சத்தம் கேட்டு சன்னல் வழியாக எட்டிப்பார்த்தார்.
"பெரிய மரம் அப்படியே கீழே சாய்ந்து சாலையை முற்றாக மறைத்துவிட்டது. அவ்வழியே வந்துக்கொண்டிருந்த டாக்சி பின்நோக்கிச் சென்று வேறு பாதையில் திரும்பிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது," என்று அந்த ஆசிரியர் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு ஒரு தீயணைப்பு வண்டியையும் ஆதரவு வாகனத்தையும் தான் அனுப்பியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பேச்சாளர் தெரிவித்தார். அந்த மரத்தை வெட்டி கிளைகளை கழித்த அந்தப் படை அதிகாரிகள், பிறகு அந்தப் பணியை தேசிய பூங்கா வாரியத்திடம் ஒப்படைத்தனர். நிலப் போக்குவரத்து ஆணையம், இந்த மரம் விழுந்த சம்பவம் பற்றி அதிகாலை 4.02 மணிக்குச் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்பூட்டியது.
ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 4ல் நேற்றுக் காலை விழுந்த மரம். படம்: ரோஜர் யாப், ஃபேஸ்புக்