புதுடெல்லி: மகளைக் கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை என காங்கிரஸ் குறை கூறியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அரசாங்க ஆதரவு சாட்சியாளராக மாறிய இந்திராணி முகர்ஜி, 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிபிஐ, அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்தார்.
“நானும் எனது கணவர் பீட்டர் முகர்ஜியும் 2006ஆம் ஆண்டு, அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை அவரது அலு வலகத்தில் சென்று சந்தித்தோம். அப்போது அவர், தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை சந்திக்கும்படியும் கார்த்தி சிதம்பரத்தின் தொழிலுக்கு உதவும்படியும் கேட்டுக்கொண்டார்.
“டெல்லி ஹயாட் ஹோட்டலில் கார்த்தி சிதம்பரத்தைச் சந்தித்தோம். அவர் எங்களிடம் 1 மில்லியன் டாலர் லஞ்சமாகக் கேட்டார்” என கூறினார்.
இந்நிலையில் சிபிஐ, அரசாங்கத்திற்கு எதிரான தாக்குதலை முன்வைத்துள்ள காங்கிரஸ், கட்சியின் தலைவரை அவமானப்படுத்தவும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.