வர்த்தக விவகாரத்துறை அதிகாரிகளும் ஏழு போலிஸ் தரைப்பிரிவு அதிகாரிகளும் ஆகஸ்ட் 19 முதல் 23 வரை நாட்டின் பல பகுதிகளிலும் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 64 ஆடவர்களும் 51 மாதர்களும் போலிசிடம் சிக்கி இருக்கிறார்கள்.
14 முதல் 52 வரை வயதுள்ள அவர்கள் அனைவரும் 214 மோசடி காரியங்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இத்தகைய செயல்களில் பெரும்பாலானவை இணையம் வழி நடந்த வர்த்தக மோசடிகள் தொடர்பானவை.
இப்போது அவர்கள் புலன்விசாரணைகளில் உதவி வருகிறார்கள் என்று போலிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக ஆக்குவது அல்லது ஏமாற்றுவது ஆகிய குற்றச்செயல்கள் தொடர்பில் அந்த சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
அவர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக நம்பப்படும் மோசடி காரியங்களில் சிக்கியவர்கள் $253,000க்கும் அதிகமான தொகையை இழந்து இருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
இணையத்தில் முன்பின் தெரியாதவர்களிடம் பொருட்களை வாங்கும்போது மிகவும் விழிப்புடன், எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளும்படி பொதுமக்களுக்கு போலிஸ் ஆலோசனை கூறி இருக்கிறது.